Saturday, August 24, 2013

வேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை!

 பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அளிக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆயிரத்து 800 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பி.எட்., படிக்காத இவர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாம் என்று உத்தரவிட்டது.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பு தகுதி தேர்வில் 652 ஆசிரியர்கள் தோல்வி அடைந்தனர். அவார்கள், உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடர்ந்து ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் பி.எட். படித்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிக்குமார், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சிறப்பு தேர்வில் தோல்வி அடைந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் பி.எட். படித்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அவசர அவசரமாக டிஸ்மிஸ் செய்தது. மேலும், 652 காலிப்பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், வேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, எங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment