Sunday, January 19, 2014

தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக மீண்டும் சிறப்பு தகுதி தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் 11 மற்றும் 12–ம் வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடம் நடத்த தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை அரசு நிறுவனமாக எல்காட் நிறுவனம் நியமித்தது.

இதற்கிடையில் புதிதாக 1880 நிரந்தர கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்களை தமிழக அரசு 2006–ம் ஆண்டு உருவாக்கியது. ஏற்கனவே தற்காலிகமாக பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அரசு முடிவு செய்தது. இந்த தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, சிறப்பு தகுதி தேர்வு 24.1.2010 அன்று நடைபெற்றது.

இந்த தேர்வில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது என்று கூறி ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, இந்த கேள்வித்தாளை சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழு ஆராய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழு கேள்விகளை ஆய்வு செய்து, மொத்தம் 150 கேள்விகளில் 20 கேள்விகள் தவறானவை என அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு, தவறான 20 கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுள்ள 130 கேள்விகளுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கி, அதில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு 2010–ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அதில், ‘தவறான 20 கேள்விகளுக்கு விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் மறு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து இந்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், ‘இந்த மறுஆய்வு மனுக்களில், மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனினும் இந்த வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. எனவே, இந்த சூழலில் சீராய்வு மனு என்ற பெயரில் வழக்கு தொடர்பான எல்லா அம்சங்களையும் மீண்டும் விவாதிக்க இயலாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய