Saturday, August 10, 2013

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்

சென்னை, ஆக. 9–
4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கணினி தொடர்பான கல்வி அறிவு இருந்தால்தான் கல்லூரி படிப்பிற்கு செல்லும்போது எளிதில் எதையும் கையாள முடியும் என்பதால் மத்திய அரசு கணினிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு 4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தனியார் மூலம் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் உத்தேசமாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்குகிறது. மொத்தம் ரூ.86 கோடி செலவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கணினிக் கல்வி கற்பிக்கப்படும்.
இதற்கான டெண்டர் பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் கோரப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் ஒப்படைத்தல் மூலம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் கணினி கல்வி அறிவை பெற முடியும்.
ஏற்கனவே அரசு சார்பில் பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுகிறது. மடிக்கணினியை பள்ளி மாணவர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

நன்றி : மாலைமலர்
.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Wednesday, July 31, 2013

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த, அரசு உத்தரவிட்டது.இத்தேர்வில், கணினி ஆசிரியர்கள், 1,714 பேர் தேர்வு எழுதினர். முதலில், தேர்வு பெற, 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என, அரசு அறிவித்தது. பின், இத்தேர்வு மதிப்பெண்ணில் விலக்கு அளித்து, 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, அறிவித்தது. இதன்படி, 35 சதவீத மதிப்பெண் பெற்ற, 1,686 கணினி ஆசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பி.எட்., முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேர்ச்சி மதிப்பெண்ணை, 50 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக அரசு குறைத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், 894 பேர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 35 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை பெற்ற 792 ஆசிரியர்கள், மறுதேர்வு எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2010, ஜனவரி 24ம் தேதி, 792 பேருக்கு மறுதேர்வு நடத்தியது.

அதில், 125 பேர் தேர்வு பெற்றனர்; மீதமுள்ள 667 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். "வினாத்தாள் குளறுபடியால், தேர்வில், அதிகளவில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. எனவே, கேள்வித்தாளை சரிபார்க்க வேண்டும்' என, ஐகோர்ட்டில், மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த ஐகோர்ட், வினாத்தாள் ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., கணினி ஆசிரியர் குழுவை அமைத்தது. இக்குழு, 150 கேள்விகளில், 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, ஐகோர்ட், தேர்வெழுதிய, 667 பேரில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், 667 ஆசிரியர்களில் இருந்து, 15 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதையடுத்து, பி.எட்., ஆசிரியர் சங்க வழக்கின் அடிப்படையில், தகுதியில்லாத, 652 பேரை பணி நீக்கம் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை  பணி நீக்கம் செய்தது.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Tuesday, July 30, 2013

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித்துறை, பணி நீக்கம் செய்தது.

மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டது. 

இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை" என, தெரிவித்தன.

நன்றி:  தினமலர்
.
பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Thursday, May 16, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50% க்கு குறைவாக மதிப்பெண் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில் பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம் கேட்கும் தாக்கீது (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.


மேல்நிலைக்கல்வி - உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50% க்கு குறைவாக மதிப்பெண் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில் பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம் கேட்கும் தாக்கீது (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.





.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Sunday, May 12, 2013

தகுதியில்லாதவர்களுக்கு பணிவாய்ப்பு: கணினி ஆசிரியர்கள் புலம்பல்


ரசுப் பள்ளிகளில் கணிப்பொறியியல் பாடத்துக்கு பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிலாக, வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
வரும் கல்வி ஆண்டிலாவது, தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று கணிப்பொறி அறிவியலில் பி.எட். முடித்தவர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளிகள் அனைத்திலும் கணிப்பொறியியல் பாடம் கற்றுத் தரப்படுகிறது.
பிற பாடங்களுக்கு அத்துறையில் பி.எட். முடித்த ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கணிப்பொறியியல் பாடத்துக்கு மட்டும் இதுவரை பி.எட். ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறியியல் பாடத்தைக் கற்றுத் தருவதற்கு பி.எட். பட்டம் பெறாதவர்களை அரசு நியமித்துள்ளது.
இந்தப் பள்ளிகளில் இன்னும் 1600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனாலும், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பணி நியமனத்தில், கணிப்பொறி அறிவியலில் பி.எட். படித்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கணிப்பொறியியலில் ஏதாவது ஒரு பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் போதும் என்ற அடிப்படையில் அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 667 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இவர்கள் பணியில் நீடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.

கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்ட விதம்:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1,850 பேர் கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 2,500 ரூபாய் சம்பளம் என்றும், ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பணிகளில் இவர்கள் தொடரலாம் என்றும் அரசு அறிவித்தது.
கணிப்பொறி ஆசிரியர் என்பதைக் குறிக்கும் முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியர் என்பதற்கு பதிலாக கணினி பயிற்றுநர் என்று இவர்களது பணியின் பெயர் குறிப்பிடப்பட்டது.
இவர்களது ஐந்தாண்டு காலப் பணி 2004-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு, 2008-ம் ஆண்டு இவர்களுக்கென தனியாக ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை எழுதிய 1,850 பேர்களில் 792 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்தத் தேர்வை எதிர்த்து 2008-ம் ஆண்டு முதுநிலையில் கணிப்பொறி அறிவியல் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 2010ம் ஆண்டு மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதை எழுதிய 792 பேர்களில் 652 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இந்த இரண்டாவது தகுதித் தேர்வை எதிர்த்து கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கில் கடந்த 2012 டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தீர்ப்புக்குப் பிறகும் இவர்கள் பணியில் தொடர்வதாக தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. இதுகுறித்து தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் கருத்தை அறிய தொடர்ந்து முயற்சித்த போதும், அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை.
மாணவர்கள் பாதிப்பு
அரசுப் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், கணிப்பொறி அறிவியல் படித்த பட்டதாரிகள் மட்டுமல்லாமல், கணிப்பொறி பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படுகிறது என்ற புகாரை பல்வேறு தரப்பினரும் முன்வைக்கிறார்கள்.
எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில், மாணவர்களின் மோகமும் கணினித் துறையை நோக்கியே திரும்பி வருகிறது.
இப்படி பெரும்பாலான மாணவர்களால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இந்த பாடத்திற்கு ஆசிரியர்கள் முறையாக நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு அந்தப் பாடம் குறித்த முழு அறிவை பெற முடியாத நிலையை அடைவார்கள் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் மற்ற பாடங்களைவிட கணினிப் பிரிவை அதிக மாணவர்கள் தேர்வு செய்வதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படியிருக்க அரசு மூலம் முறையான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் பள்ளி நிர்வாகமே ஒரு கணினி ஆசிரியரை நியமிக்கும் நிலை உள்ளது.
இதனால் முறையான கல்வியின்றி பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தனது மேற்படிப்பில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கருதுகின்றனர் கல்வியாளர்கள்.
கணினியை பாடமாக எடுத்துப் படிக்கும் ஆசிரியர்களின் பாதிப்பு ஒருபுறமிருக்க மற்றொருபுறம் மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி : புதிய தலைமுறை
.


பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய

Friday, May 10, 2013

கணினி ஆசிரியர்களின் கல்வித் தகுதி என்ன?

கணினி ஆசிரியர்களின் கல்வித் தகுதி என்ன என்பது குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு  இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி :புதிய தலைமுறை 
. பிடிஎப்(PDF) ஆக தரவிறக்கம் செய்ய